அமராவதி: ஜெர்மனியின் ஹேமலின் நகரை சேர்ந்த பைட் பைபர் எனும் இசைக் கலைஞர் தமது புல்லாங்குழலை இசைத்து எலிகளை விரட்டினார் என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். மகாராஷ்டிராவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இதே போன்ற வேறு ஒரு உத்தியைப் பயன்படுத்தி எலிகளை அல்ல குரங்குகளை பிடித்து காட்டில் விடுகின்றனர்.
சேதம் விளைவிக்கும் குரங்குகள்: கும்பல், கும்பலாக திரண்டு வரும் குரங்குகள் விவசாயிகளுக்கு, விவசாயிகள் அறுவடை செய்த தானியங்களுக்கு பெரும் அளவில் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. அத்தகைய குரங்குகளை பிடிக்கும் கிரி சகோதரர்கள் அவற்றுக்கு உணவு அளித்து பாதுகாப்பாக கூண்டுகளில் கொண்டு சென்று வனப்பகுதியில் விடுகின்றனர். அமராவதியின் அஞ்சன்காவ்ன் பாரியில் பகுதியில் அண்மையில் 62 குரங்குகளை வெறும் அரை மணி நேரத்தில் சமாதன் கிரியும் அவரது சகோதரர்களும் பிடித்துள்ளனர். வேளாண் நிலங்களில் ஓடி ஆடி விளையாடும் குரங்குகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன. மரங்களில் ஏறி விளைந்திருக்கும் பழங்களை உண்கின்றன. வீடுகளின் கூரைகளில் ஆட்டம் போட்டு சேதப்படுத்துகின்றன. விவசாயியை வேதனையின் உச்சத்துக்கு தள்ளுகின்றன. அப்போதுதான் சமாதன் தமது சகோதரர்கள் சந்தீப், கிருஷ்ணா ஆகியோருடன் அந்த பண்ணைக்குச் செல்கிறார்.

குரங்குகளைப் பிடிக்கும் சகோதரர்களைப் பொறுத்த வரை 30 நிமிட வேலை என்பது சிறப்பான ஒன்றல்ல. அவர்களது குடும்பம் நீண்டகாலமாகவே குரங்குகளை பிடித்து அவற்றை வனத்துக்குள் விடும் பணியை மேற்கொண்டு வருகிறது. அவர்களின் தாத்தா காலத்தில் இருந்து பரம்பரை பரம்பரையாக இதில் நிபுணத்துவம் பெற்றிருக்கின்றனர். இப்போது கிரி சகோதர்கள் அதை சிறப்பான முறையில் செய்து வருகின்றனர்.
ரத்தத்தில் ஊறிய வேலை: பயிற்சிக்கான வழிகாட்டும் புத்தகங்களைக் கொண்டு இந்த சகோதரர்கள் உத்திகளை பயிலவில்லை. பரபரம்பரையாக இது அவர்கள் ரத்தத்தில் ஊறிய விஷயமாக இருக்கிறது. சமாதன் 10 வயதாக இருக்கும் போதே குரங்குகளை பிடிக்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்து விட்டார். தமது குடும்பத்தினருடன் மகாராஷ்டிராவில் உள்ள 3500-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று குரங்குகளை பிடிப்பதையெல்லாம் பார்த்து அந்த உத்தியை கற்றுக் கொண்டுள்ளார். அவர்கள் மேற்கொள்ளும் உத்தி என்பது மிகவும் எளிமையானது, பலன் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. ஒரு பெரிய கூண்டை வைக்கின்றனர். அந்த கூண்டுக்குள் வாழைப்பழங்கள், மக்காசோளம் ஆகியவற்றை வைக்கின்றனர். அப்போது அதை தேடி வரும் குரங்குகள் கூண்டுக்குள் செல்லும் போது மாட்டிக் கொள்கின்றன.

"அஞ்சன்காவ்ன் பாரியில் உள்ள ரவீந்திரா மேத்கர் பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் அரை மணி நேரத்தில் 60 குரங்குகளை பிடித்தோம். அவைகளை ஒரு போதும் துரத்துவதில்லை அல்லது தீங்கு விளைவிப்பதில்லை. அவைகள் உணவை விரும்பும் என்பது எங்களுக்குத் தெரியும். அவைகள் கூண்டுக்குள் வருவதற்கு மட்டுமே வழி காட்டுகின்றோம். இது அவைகளைப் பற்றிய புரிதலாகும். பின்னர் அந்த குரங்குகளை பாதுகாப்பான இடங்களில் விட்டு விடுகின்றோம்.
சிறிய கூண்டுகளில் இருந்து பெரிய கூண்டுகளுக்குள் வேர்க்கடலை மற்றும் சோளக் கருக்கள் போன்ற உணவுப் பொருட்களை வைத்து அங்கு குரங்குகள் மாற்றப்படுகின்றன. தவிர கூண்டுக்குள் குரங்குகள் குடிப்பதற்காக தண்ணீரும் வைக்கின்றோம். அனைத்து குரங்குகளையும் பிடித்த உடன் புல்தானா மாவட்டத்தில் உள்ள போதா வனப்பகுதிக்கு அருகே பாதுகாப்பாக விடப்படுகின்றன," என்றார் சமாதன் கிரி.
குரங்கு மனிதர்: "எங்கள் பண்ணையில் தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்வறு வேளாண் பயிர்களை குரங்குகள் சேதப்படுத்தின. கோழிப் பண்ணையின் கூரை மீது ஏறி கூரையை சேதப்படுத்தின. எனவே எனக்கு உதவி செய்வதற்காகவும், பக்கத்தில் உள்ள கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு உதவி செய்வதற்காகவும் கிரி சகோதரர்களை வரவழைத்தோம்,"என்றார் ரவீந்திரா மேத்கர்.
கிரி பந்து என்று அறியப்படும் அவர், குரங்கு மனிதர் என்றும் அழைக்கப்படுகிறார். சத்திரபதி சாம்பாஜி மாவட்டம் சிலோட் தாலுகாவில் உள்ள அம்பாய் கிராமத்தை சேர்ந்தவராவார். மாநிலம் முழுவதும் இதுவரை 4.5 லட்சம் குரங்குகளை பிடித்து அவற்றை வனப்பகுதிக்குள் விட்டிருக்கின்றனர். கிரி சகோதரர்கள் வனவிலங்குகளை நேசிப்பவர்களாக உள்ளனர். குரங்களுக்கு புதிய வாழ்க்கை அளிப்பது குறித்து அவர்கள் பெருமைப்படுகின்றனர். "குரங்குகள் பயிர்களை சேதப்படுத்துவது மட்டும் விஷயம் அல்ல. குரங்குகள் பயிர்களை சேதப்படுத்தும்போது மனிதர்கள் அவற்றை பல வழிகளில் துன்புறுத்துகின்றனர். அவைகளைப் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்த வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகின்றோம்,"என்றார் சமாதன் கிரி. விவசாயிகள், குரங்குகள் என இரண்டு தரப்பும் பாதிக்கப்படாதவாறு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று நினைக்கின்றோம் என்றார்.
விவசாயிகளுக்கு ஊறுவிளைவிக்கும் குரங்குகளைப் பிடித்து வனப் பகுதிகளில் விடும் அவர்களின் முயற்சியை கேள்விப்பட்ட மகாராஷ்டிரா முன்னாள் ஆளுநர் ரமேஷ் பைஸ், சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூரில் உள்ள தமது வேளாண் பண்ணையில் அட்டகாசம் செய்த குரங்குகளைப் பிடிக்க அவர்களது உதவியைப் பெற்றார். மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் குரங்குகளை பிடித்து வனத்துக்குள் விடும் பணியை இந்த சகோதரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கிராமங்களில் குரங்குகளைப் பிடிக்கும் போது மக்கள் அதிக அளவில் கூட்டம் கூடுவது பிரச்னைக்கு உரியதாகி விடுகிறது. எனினும் கூட இப்போது அது போன்ற சூழல்களையும் சமாளிக்க தொடங்கி விட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
அரசின் உதவி: ஒரு குரங்கை பிடித்து காட்டுக்குள் விடுவதற்கு ரூ.800 கட்டணமாக வசூலிக்கின்றனர். ரவீந்திரா மேத்கர் போன்ற விவசாயிகளுக்கு இது போன்று செலவழிப்பது சரியானது தான் என்று புரிந்திருக்கிறது. "குரங்குகளால் லட்சகணக்கான ரூபாய் மதிப்புள்ள விளைபொருட்கள் சேதம் அடைகின்றன. எங்களது பெரும் இழப்பை தடுப்பதற்கு இது போன்ற சிறிய தொகையை கொடுப்பதை பொருட்டாக நினைக்கவில்லை," என்றார் மேத்கர்.
மகாரஷ்டிரா மாநிலத்தின் வருவாய் மற்றும் வனத்துறையின் சார்பில் கொங்கன், மராத்வாடா பகுதிகளில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்காக சமாதன் கிரிக்கு ரூ.60,000 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. "சிப்லுன், ரத்னகிரி, மற்றும் டபோலி ஆகிய இடங்களில் எங்களது பணிக்கு அரசு ஆதரவு தெரிவிக்கிறது," என்றார் சமாதன் கிரி.