ஹைதராபாத்: மக்கள்தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்குமான நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மத்திய அரசின் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஒன்றிய அரசு பல ஆண்டுகளுக்கு முன் முன்னெடுத்த மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தங்களுக்கு தண்டனையாக அமையும். எனவே மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
அத்துடன் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க, பல்வேறு மாநிலக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்ற தென்மாநில கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் , சென்னையில் கடந்த 22 -ம் தேதி நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தீ்ர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தெலங்கானா சட்டமன்றத்தில் அந்த மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான ஓர் தீர்மானத்தை இன்று கொண்டு வந்தார்.
அதில், 'நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை எவ்வித வெளிப்படைத்தன்மையுடன் கூடிய ஆலோசனைகள் இல்லாமல் மத்திய அரசு முன்னெடுப்பது குறித்து இந்த அவை தமது கவலையை தெரிவித்துக் கொள்கிறது.
மத்திய அரசு முன்னெடுத்த மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு தண்டனை அளிப்பது போல இத்திட்டம் உள்ளது. எனவே நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு மக்கள்தொகையை அளவுகோலாக கொள்ளக்கூடாது. அத்துடன், தேசிய மக்கள்தொகை நிலைப்படுத்துதலை கருத்தில் கண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 42, 84 மற்றும் 87 ஆவது பிரிவுகளி்ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் நோக்கமும் இன்னும் முழுமையாக எட்டப்படவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, மக்கள்தொகையின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பதற்கு பதிலாக, மாநிலங்களை அளவீடாக கொண்டு அவற்றின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை மறுவரையறை செய்யலாம். அத்துடன் அதில் சமீபத்திய மக்கள்தொகை அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் பெண்களுக்கு உரிய இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேலும், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை வலுப்படுத்த, ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் -2014 மற்றும் சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தெலங்கானா மாநில சட்டமன்றத்தில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை 119 இலிருந்து 153 ஆக அதிகரிக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கு தேவையான திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசை இந்த அவை வலியுறுத்துகிறது.' என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கொண்ட வந்த இந்தத் தீர்மானம் தெலங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.