புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பெஹல்காமுக்கு அருகே அமைந்துள்ளது பிரபல சுற்றுலா தலமான பைசரன் புல்வெளி பகுதி. இங்கு நேற்று முன்தினம் பிற்பகல் 2:30 மணியளவில் நிக்ழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் இருந்து இயங்கிவரும் லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தி ரெசிஸ்டென்ட் ஃப்ரன்ட்' என்ற அமைப்பு இக்கொடூர சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளது.
உலக அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தையடுத்து, பாகிஸ்தான் மீதான இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று (ஏப்ரல் 23) மாலை நடைபெற்ற பாதுகாப்புக்கான உயர்நிலை அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முக்கிய முடிவுகளின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது இந்தியாவின் கடும் நடவடிக்கைகள் பாய தொடங்கியுள்ளன.
பாகிஸ்தானியர்களுக்கு கெடு: அதன்படி, பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்திய விசாக்கள் ஏப்ரல் 27-ம் தேதி முதல் செல்லுபடியாகாது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. அதேசமயம் மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தானியர்களின் விசா மட்டும் இரண்டு நாட்கள் கூடுதலாக, அதாவது ஏப்ரல் 29-ம் தேதி வரை செல்லுபடியாகும். எனவே குறிப்பிட்ட தேதிகளுக்கு முன் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. மேலும், இந்தியர்கள் யாரும் பாகிஸ்தானுக்கு போக வேண்டாம் எனவும், ஏற்கெனவே அங்கு பயணம் மேற்கொண்டவர்கள் கூடிய விரைவில் நாடு திரும்பும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசின் வலைதளம் முடக்கம்: பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளமான '@GovtofPakistan' இந்தியாவில் முடக்கப்படுவதாகவும் மத்திய அரசு இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-இல் கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதை நிறுத்தும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கைகுலுக்கவும் தடை: இந்தியா -பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி - வாகா எல்லையில் தினமும் இருநாடுகளின் தேசியக் கொடிகளை ஏற்றி இறக்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். வண்ணமயமான இந்த நிகழ்வின்போது இந்தியா -பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் பரஸ்பரம் கைகுலுக்கி கொள்வதும் வழக்கம். இந்த எல்லை மூடப்பட்டுள்ள நிலையில், இனி கொடியேற்ற நிகழ்வின்போது பாகிஸ்தான் வீரர்களுடன், இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கைகுலுக்க கூடாது என்று மத்திய அரசு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
வெளிநாட்டு தூதர்களுக்கு அழைப்பு: இந்தியாவில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதர்களையும் சந்திக்க வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று மாலை அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பின் பேரில் டெல்லி திரண்ட பல்வேறு நாடுகளின் தூதர்களை அவர் சந்தித்து பேசினார். பயங்கரவாத தாக்குதல் விஷயத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறி்ததும், பாகிஸ்தான் மீது உலக நாடுகள் எடுக்க வேண்டிய கடுமையான நடவடிக்கைகள் பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
குடியரசுத் தலைவரை சந்தித்த அமித் ஷா: பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இந்த நிலையில்,குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று மாலை சந்தித்து பேசினர். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது பெஹல்காம் தாக்குதல் சம்பவத்தையடுத்து, பாகிஸ்தான் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் இருவரும் எடுத்துரைத்ததாக தெரிகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.