டெல்லி: ஜம்மு - காஷ்மீரின் பெஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 25 பேரின் உடல்கள் விமானங்கள் மூலம் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இறந்தவர்களின் உறவினர்கள் 123 பேர் உள்பட சுற்றுலாப் பயணிகளை மீட்க 59 விமானங்கள் நேற்று ஸ்ரீநகரில் இருந்து இயக்கப்பட்டன.
காஷ்மீரில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக 52 திட்டமிடப்பட்ட விமானங்களும், ஏழு கூடுதல் விமானங்களும் இயக்கப்பட்டதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்தார். விமானங்கள் மூலம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் மற்றும் 123 குடும்ப உறுப்பினர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
நேற்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி நிலவரப்படி, 20 விமானங்களில் 3,337 பயணிகள் ஸ்ரீநகரிலிருந்து புறப்பட்டுள்ளனர். இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் இந்த திட்டமிடப்பட்ட சேவை நேரங்களில் விமானங்களை இயக்கியுள்ளன.
விமானக் கட்டண உயர்வைத் தவிர்க்க விமான நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். கட்டணங்கள் நியாயமானதாக இருக்க கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீநகரில் இருந்து புறப்படும் விமானங்களுக்கான டிக்கெட் விலைகள் ரூ.50,000-க்கும் அதிகமாக இருப்பதாக சில வலைத்தளங்கள் வெளிப்படையாக சுட்டிகாட்டிய நிலையில் அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, அவசரகால சூழ்நிலையை கருத்தில் கொண்டு கட்டணங்களை உயர்த்தாமல் சீராக வைத்திருக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
ஸ்ரீநகரிலிருந்து மும்பை மற்றும் டெல்லி வரையிலான விமானங்களுக்கான கட்டணங்கள் குறைவாக இருப்பதை உறுதி செய்வதற்காக கட்டண வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க |
பசுமை புல்வெளியில் சுற்றுலாவை பயணிகள் இன்பமாய் சுற்றித்திரிந்த இடத்தை, ரத்தக் காடாக பயங்கரவாதிகள் மாற்றிய சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒன்றிய அரசும் பாதுகாப்புத் துறையுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
2019-இல் நிகழ்த்தப்பட்ட புல்வாமா தாக்குதலுக்குப் பின், பெஹல்காம் கொடூர சம்பவத்தை பயங்கரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர். தாக்குதலுக்கு பின் வாகா-அட்டாரி எல்லைகளை மூடவும், மே 1 ஆம் தேதிக்குள் நாட்டிற்குள் இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என பல அதிரடி உத்தரவுகளை இந்திய அரசு பிறப்பித்துள்ளது பெஹல்காமில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் உள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.