புதுடெல்லி: காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற நிலையில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
2 நிமிடம் மவுன அஞ்சலி: இந்த நிலையில் பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சூழல் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிக்கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அனைத்து கட்சிக்கூட்டத்தின் ஆலோசனை தொடங்கும் முன்பாக பெஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக அனைத்து கட்சிகளின் தலைவர்களும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளின் சார்பில் தலைவர்கள் தங்கள் கருத்துகளை எடுத்து வைத்தனர். அனைத்து கட்சிக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் தலைவர்கள் அனைவரும், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். கூட்டத்தின் தொடக்கத்தில், பெஹல்காமில் நடைபெற்ற சம்பவம் குறித்தும், அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.
#WATCH | Delhi: After the all-party meeting, Union Minister Kiren Rijiju says, " ...everyone has agreed that india should fight against terrorism unitedly. india has taken strong action against terrorism in the past and will continue to do so. this has been discussed in the… pic.twitter.com/KpL25kFDoN
— ANI (@ANI) April 24, 2025
இதையும் படிங்க: பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைத்து பார்த்திராத தண்டனை.. கோபத்தில் கர்ஜித்த மோடி!
ஒருமித்த குரல்: முற்றிலும் தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற அரசின் நிலைப்பாடு குறித்தும் அவர் எடுத்துரைத்தார். இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக காஷ்மீர் மக்கள் தங்கள் வணிகத்தை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். அனைத்தும் நன்றாக நடந்து கொண்டிருந்தது. ஆனால், இந்த நிகழ்வு அமைதியான சூழலை பாழ்படுத்தி விட்டது. இது குறித்து ஒவ்வொருவரும் தங்களது கவலைகளை எடுத்துரைத்தனர். பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருமித்த குரலில் குரல் கொடுக்கவும், நாட்டுக்கு ஆதரவாக ஒன்றிணைவது என்றும் அனைத்து கட்சிகளும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்,"என்றார்.
#WATCH | Delhi: After attending the all-party meeting convened by the central government, Congress president Mallikarjun Kharge says, " defence minister rajnath singh chaired the meeting, union home minister amit shah was also there. all parties condemned the… pic.twitter.com/NnVPZxRBAI
— ANI (@ANI) April 24, 2025
காங்கிரஸ் சார்பில் பங்கேற்ற மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இருவரும், தீவிரவாதத்துக்கு எதிராக அரசு எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
அரசுக்கு திமுக ஆதரவு: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, "பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வைத்த கருத்துகளை தெரிவித்தேன். இந்த சம்பவம் குறித்து வெறும் கண்டனங்கள் தெரிவிப்பதோடு மட்டும் நின்று விடக் கூடாது. எதிர்காலத்தில் இது போன்ற நடவடிக்கைகள் தொடராதவாறு சில நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். நாட்டுக்கு எதிரான பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு உறுதியாக மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் திமுக ஆதரவு தரும்,"என்று கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.