புதுடெல்லி: தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது மூன்று மாத த்துக்குள் குடியரசு தலைவர் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது. இது தொடர்பாக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை குடியரசு தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது:
"சட்டப்பிரிவு 142-ஐ ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஆயுத ஏவுகணையை போல நீதித்துறை பயன்படுத்துகிறது. குடியரசு தலைவர் பதவி என்பது நாட்டிலேயே மிக உயர்ந்த பதவி என்பதை யாரும் மறக்கக் கூடாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பில் குடியரசு தலைவர் இருக்கிறார். அப்படி இருக்கையில், அவருக்கே உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவு போடுகிறது.
நம் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்? குடியரசு தலைவருக்கு நீதிமன்றம் காலக்கெடு விதிக்கிறது என்றால், எதிர்காலத்தில் நீதிபதிகளே சட்டமியற்றுவார்கள். அதனை அவர்களே செயல்படுத்துவார்கள். உச்ச நீதிமன்றம் ஒரு சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படும். ஏனென்றால், நீதிபதிகள் தான் எந்த சட்ட வரையறுக்குள் வர மாட்டார் அல்லவா?" என ஜக்தீப் தன்கர் கேள்வி எழுப்பி இருந்தார்.

நடுநிலை தேவை:ஜக்தீப் தன்கர் கருத்துக்கு இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாநிலங்களவையின் மூத்த எம்பிக்களில் ஒருவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், "மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் மூன்று மாத காலத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை தன்கர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது அரசியல் சட்டத்துக்கு மாறானது. இது போன்று அரசியல் கருத்துகளை சொல்லும் மாநிலங்களவைத் தலைவரை ஒருபோதும் நான் பார்த்ததில்லை.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவருக்கே உச்ச நீதிமன்றம் உத்தரவு போடுவதா? துணை ஜனாதிபதி ஆவேசம்!
மக்களவை தலைவர், மாநிலங்களவை தலைவர் இருவரும் ஆளும் கட்சி- எதிர்க்கட்சிகளுக்கு இடையே நடுநிலைமை வகிக்க வேண்டும். அவர்கள் ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளர் போல இருக்க முடியாது. மக்களவைத் தலைவர் ஆளும் கட்சி-எதிர்க்கட்சி இடையே நடுநிலைமை வகிக்கிறார் என்பது ஒவ்வொருவரும் அறிந்த ஒன்று. அவர் அவையின் சபாநாயகர் மட்டுமே, கட்சியின் செய்தித் தொடர்பாளர் அல்ல. அவர்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. ஏதேனும் ஒரு விஷயத்தில் ஆதரவு, எதிர்ப்பு ஓட்டுகள் சமநிலையில் இருந்தால், அவர்கள் ஓட்டு அளிக்க முடியும். இதே நிலை மாநிலங்களவைக்கும் பொருந்தும். மாநிலங்களவை தலைவரும் ஆளும் கட்சி- எதிர்க்கட்சிகள் இடையே நடுநிலை வகிக்க வேண்டும்.
தாக்குதல் கூடாது: தன்கர் அவ்வாறு இருக்கிறார் என்று சொல்லவில்லை. எந்த ஒரு சபாநாயகரும், எந்த ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருக்க முடியாது. அவ்வாறு இருப்பது போல தோன்றினால், அவையின் சபாநாயகர் என்ற பதவிக்கு குறைவு ஏற்பட்டதாக ஆகிவிடும். இது போன்ற கருத்துகளை சொல்லும்பட்சத்தில், நீதிமன்றத்துக்கு ஒரு பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்று சொல்வதைப் போல இருக்கிறது. இது நடுநிலை தன்மையோ , அரசியல் சட்டரீதியானதோ அல்ல. இந்த முறையில் நீதித்துறையானது அரசியல் நிர்வாகத்தால் தாக்குதல் நடத்தப்படக் கூடாது.
அரசியல் குழுவானது நீதித்துறையை சார்ந்து இருக்க வேண்டியது அவசியம். நீதித்துறையின் சுதந்திரம் என்பது நாட்டின் ஜனநாயகத்தன்மைக்கு அடிப்படையாகும். அதன் மீது இவ்வாறு விமர்சனங்களை வைப்பது அரசியல் சட்டத்துக்கு மாறானது. இந்த முறையில் அரசியல் விமர்சனங்களை முன் வைக்கும் அவையின் எந்த தலைவரையும் நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அவரது விமர்சனம் அதிருப்தி அளிப்பதாக உள்ளது,"என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்