சாம்ராஜ் நகர்(கர்நாடகா): காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர். இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதனையடுத்து கடந்த 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான எல்லையை மூடுவது, பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் பகிர்வை நிறுத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் பெஹல்காம் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நேற்று இரவு அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சி தலைவர்களும், பயங்கரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் பெஹல்காம் தாக்குதல் குறித்து கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா,"சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை அடையாளம் கண்டுபிடித்து, அவர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கு துணை நிற்பவர்களுக்கும் நினைத்து பாரக்க முடியாத அளவுக்கு தண்டனை கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி இப்போது கூறியிருக்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டு புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். அப்போதும் இதே போன்று பிரதமர் மோடி கருத்துத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மனிதநேயம் இன்னும் மரிக்கவில்லை என்பதற்கு சாட்சியாக திகழும் காஷ்மீர் இளைஞர்.. பெஹல்காம் தாக்குதலின்போது செய்த தரமான சம்பவம்!
அதன் பின்னரும் இப்போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் என்ன கூறினார். அதன் பின்னரும் இப்போது பெஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். அ்ப்போது அவர் பயங்கரவாதத்தை முற்றிலும் வேரோடு ஒழிப்பேன் என்று கூறினார். அதன் பின்னர் என்ன நடந்தது?
பெஹல்காம் தாக்குதல் தொடர்பாக புதுடெல்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டம் குறித்து எனக்கு தெரியாது. என்னை சுற்றி பல்வேறு மக்கள் இருக்கின்றனர். அங்கு நடந்த அனைத்து கட்சி கூட்டம் குறித்து முறையான தகவல்களை நான் அறியவில்லை. பெஹல்காம் தாக்குதலைப் பொறுத்தவரை அது மத்திய உளவுத்துறையின் தோல்வியாகும்,"என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்