காஷ்மீர்: பெஹல்காம் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்த்து பயங்கரவாதிகளிடம் கேள்வி எழுப்பிய இளைஞரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
"ஏன் அப்பாவி மக்களைக் கொல்கிறீர்கள்?" இந்த வார்த்தையை கூறியது வேறு யாரும் அல்ல. அதிநவீன துப்பாக்கிக்களை கொண்டு பெஹல்காமில் சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டு கொன்று குவித்து வந்த வேளையில், எவ்வித அச்சமும் இல்லாமல் அவர்களிடம் இந்த கேள்வி எழுப்பி, பயங்கரவாதிகளின் கோபத்துக்குள்ளாகி தனது இன்னுயிரை இழந்துள்ளார் இருபதே வயதான சையத் அடில் ஹுசைன் ஷா.
தெற்கு காஷ்மீரில் உள்ள பெஹல்காம் பகுதி சுற்றுலாவுக்கு மிகவும் புகழ்பெற்ற இடமாக திகழ்கிறது. இங்குள்ள பைசரன் என்ற பகுதிக்கு நடந்தோ அல்லது குதிரைகள் மூலமாக மட்டுமே செல்ல முடியும். அதனால் இப்பகுதியில் குதிரை சவாரிக்கு எப்போதும் மவுசு அதிகம். இங்கு கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளை தனது குதிரையில் அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் சையத் அடில் ஹுசைன் ஷா.
அனந்த்நாக்கின் ஐஷ் முகாமில் உள்ள ஹபட்னர் கிராமத்தைச் சேர்ந்த அவர், வீட்டிற்கு மூத்தவர். வீட்டிற்கு வருமானம் ஈட்டி தரும் நபராக இருந்த அவர் தற்போது இல்லை. அவரை இழந்து வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என அவரின் பெற்றோரும், அவரது சகோதரரும் தற்போது தவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்த சையத் அடில் ஹுசைன் ஷா, தாக்குல் நடைபெற்ற அன்று தான் பணிக்கு சென்றதாகவும் அவரது சகோதரர் நௌஷாத் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலால் அடில் அதிர்ச்சியடைந்து அவர்களை நோக்கி கேள்வி எழுப்பியதாவும், அப்பாவி மக்களை ஏன் கொல்கிறீர்கள்? என்ற வார்த்தை பயங்கரவாதிகளை கோபப்படுத்தியதால், தனது சகோதரனையும் தீவிரவாதிகள் மார்பில் சுட்டதாகவும் அடிலின் சகோதரர் நௌஷாத் வேதனையுடன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஜம்மு -காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - அங்கு தற்போதைய நிலவரம் என்ன? |
சையத் அடில் ஹுசைன் ஷாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா, அடிலின் துணிச்சலைப் பாராட்டினார். அடிலின் குடும்பத்தினரோடு பேசிய முதல்வர், குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

தனது மகன் ஒரு அப்பாவி, அவன் இறந்ததற்கு நிச்சயம் நீதி வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் தான் தனது மகன் ஆத்மா சாந்தியடையும் என்றும், அதற்கான முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும் எனவும் சையத் அடில் ஹுசைன் ஷாவின் தந்தை கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாதிகளின் துப்பாக்கியில் இருந்து வரும் தோட்டாக்களை கண்டு அஞ்சாமல், அப்பாவி மக்களின் உயிரை காப்பாற்ற அவர் காட்டிய அக்கறை மெய்சிலிக்கும் வகையில் இருந்ததாக அந்த தாக்குதலில் தப்பியவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.