ஒடிசாவில் நடைபெற்ற பயங்கர ரயில் விபத்தின் காராணமாக 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. எனவே, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் உள்பட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று (ஜூன் 3) இரவுமுருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி மாத பௌர்ணமி நன்னாள் இரவில், தங்க ரத உலா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்க ரதம் இழுத்தனர்.
மேலும், அதில் ஏராளமான பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கிரிவலத்திற்கு முன்னதாக நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில், ஒடிசா ரயில் கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் ஆன்மா அமைதி பெறவும், காயமுற்றோர் விரைந்து நலம் பெற்று வீடு திரும்பவும் வேண்டி சிறப்பு பிராத்தனை செய்தனர்.