தமிழ்நாடு

tamil nadu

பயிற்சி கூடமான பூர்வீக வீடு.. மதுரையில் ஓர் 'மாணிக்கம்' - இப்படியும் ஓர் ஐஏஎஸ் அதிகாரியா..? - நெகிழ்ச்சி சம்பவத்தின் சிறப்பு தொகுப்பு!

By

Published : Jun 4, 2023, 11:56 AM IST

Updated : Jun 4, 2023, 1:52 PM IST

மனிதருள் 'மாணிக்கம்'.. மதுரை ஐஏஎஸ் அதிகாரியின் மகத்தான செயல்

கேரள மாநில உள்ளாட்சித் துறையில் இயக்குநராகப் பணியாற்றி வரும் ராஜமாணிக்கம் ஐஏஎஸ், தனது தன்னலம் கருதாத செயல்பாடுகளால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் ஆழப் பதிந்துள்ளதன் காரணத்தை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

கேரள மாநில உள்ளாட்சித் துறையில் இயக்குநராகப் பணியாற்றி வரும் ராஜமாணிக்கம் ஐஏஎஸ் நடத்தும் பயிற்சிகள் குறித்த தொகுப்பு

மதுரை:மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகே உள்ளது, திருவாதவூர் கிராமம். இதனைச் சுற்றிலும் பல கிராமங்கள் உள்ளன. அங்குள்ள பள்ளி மாணவ, மாணவியர் தங்களுக்கான உயர் கல்விக்கு அல்லது கூடுதல் பயிற்சிக்கு மேலூர், ஒத்தக்கடை, மதுரை அல்லது சிவகங்கை ஆகிய இடங்களுக்குத்தான் செல்ல வேண்டும்.

சற்றே பின் தங்கிய இந்த கிராமத்திலிருந்து எந்த வித வழிகாட்டலும் இன்றி, கடுமையாக உழைத்து இன்று கேரள மாநில உள்ளாட்சித் துறையின் இயக்குநராக பொறுப்பு வகித்து வருபவர்தான், ராஜமாணிக்கம் ஐஏஎஸ். திருவாதவூர் சிவன் கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும். அதற்கு இணையான பெருமை பெற்ற மற்றொரு இடமும் அங்கே உள்ளது. அது சைவ சமயக் குரவர்களுள் ஒருவராகப் போற்றப்படும் மாணிக்கவாசகர் பிறந்த ஊரும், அவருக்கென்று தனிக் கோயிலும் உள்ள ஊரும் இதுவாகும். இந்தக் கோயிலின் பேஷ்காராகப் பணியாற்றிவ குருசாமி என்பவரது மகன்தான் ராஜமாணிக்கம் ஐஏஎஸ்.

நூலகமாக மாறிய பூர்வீக வீடு:அதனாலேயே தன்னுடைய தந்தையாரின் நினைவாக உள்ளூர் மாணவ, மாணவிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் தன்னுடைய பூர்வீக வீட்டையே மிக அழகாக மாற்றி, அங்கே நூலகம் மற்றும் 'அறிவகம்' என்ற பெயரில் பயிற்சி மையமும் உருவாக்கி, பயிற்சியில் சேர்ந்த 6 பேரை அரசுப் பணிக்கு தேர்வு பெறச் செய்து சாதித்துக் காட்டியுள்ளார்.

அத்துடன் நின்றுவிடாமல், இந்த ஆண்டு முதல் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில் குழந்தைகளுக்கு சிலம்பம், வளரி விளையாட்டுகளும், பரதம், மேற்கத்திய நடனம், யோகா, எழுத்து, பாடல் பயிற்சி, ஓவியம், தையல் பயிற்சி, தட்டச்சுப் பயிற்சி, கூடை பின்னுதல் என 12 வகையான பயிற்சிகளை முற்றிலும் இலவசமாக வழங்கி அசத்தியுள்ளார்.

சற்றேறக்குறைய 300க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர்கள் மட்டுமன்றி குடும்பப் பெண்களும் இந்த கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். மேலும், இந்த பயிற்சிகளை வழங்கக் கூடிய தரமான ஆசிரியர்களை மதுரை மாவட்டம் முழுவதும் தேடி கண்டுபிடித்து, அவர்களை அழைத்து வந்து திருவாதவூரைச் சுற்றியுள்ள குழந்தைகளின் அறிவு, கல்வி, விளையாட்டு, தொழில் மேம்பாட்டுக்கு வழி வகை செய்துள்ளார்.

இயலாத நிலையில் இலக்கை அடைந்தோம்: பயிற்சிக்கு வந்திருந்த குழந்தைகளான கட்டையன்பட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமி, திருவாதவூரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, மாணிக்கம்பட்டியைச் சேர்ந்த இனியா ஆகியோர் கூறுகையில், “பல்வேறு கலைகளை இந்தக் கோடை விடுமுறையில் கற்றுக் கொள்ள மிகவும் வாய்ப்பு உருவானது மகிழ்ச்சியாக உள்ளது. கூடுதலாக எதைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றாலும், மதுரைக்கோ மேலூருக்கோதான் நாங்கள் செல்ல வேண்டும்.

அதுமட்டுமன்றி, கட்டணம் கொடுக்க இயலாத குடும்ப நிலை. 35 நாட்கள் இங்கே கற்றுக் கொண்ட கலைகள் அனைத்தும் எங்கள் வாழ்க்கைக்கானது. ஆகையால், ராஜமாணிக்கம் ஐயா இதனைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கு முன் வர வேண்டும் என்பதை எங்கள் கோரிக்கையாக வைக்கிறோம்” என்றனர்.

அதேநேரம், பயிற்சியின் 34வது நாளில் சிறப்பு விருந்தினராக வந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழியற்புல இணைப் பேராசிரியை சுமதியும், சிலம்பம் மற்றும் களரி பயிற்றுநர் முத்துமாரி ஆகியோரும் கூறுகையில், “இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்து உயரிய பொறுப்பில் இருக்கும் ராஜமாணிக்கம் ஐஏஎஸ், தன்னுடைய கிராமத்து குழந்தைகளுக்காக மெனக்கெட்டு இந்தப் பயிற்சிகளை வழங்குவது பிற அனைவருக்கும் முன்னுதாரணமாகும்.

முன்னேற்றம் மட்டுமே இலக்கு:தன்னுடைய முன்னேற்றத்தை மட்டும் பார்க்காமல், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொள்வது அவசியம் என்பதை சொல்லாமல் அனைவருக்கும் உணர்த்துகிறார். மதுரையிலிருந்து நாள்தோறும் வருகை தந்து பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள்.

தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு எப்படியாவது வாய்ப்புகள் உருவாகும். ஆனால், அரசுப் பள்ளி மாணவ - மாணவியர் நிலை அப்படியல்ல. அங்கு ஏழைக் குழந்தைகளே படிக்கிறார்கள். ஆகையால், அவர்களுக்காகவே இந்த கோடை கால பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

சிலம்பம் மற்றும் வளரி ஆகிய இரண்டு கலைகளும் மாணவ, மாணவியரின் கவனத்தை மனநிலையை ஒருங்கிணைக்கக் கூடியவை. எனவே, இந்தப் பயிற்சிகள் அவர்களுக்கான தியானம் என்றே கூறலாம்” என்றனர். மேலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்போடு இந்தப் பயிற்சி முகாமை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முனைவர் சத்தியமூர்த்தி கூறுகையில், “ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு விருந்தினர்கள் இங்கே வருகை தந்து சிறப்பிக்கின்றனர்.

அந்த வகையில், தென்மண்டல காவல் துறை துணைத் தலைவர் பொன்னி ஐபிஎஸ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி உள்ளிட்ட பிரபலங்கள் வருகை தந்ததுடன், இங்கு வழங்கப்படுகின்ற பயிற்சிகளைப் பார்த்து விட்டு, தாங்கள் பிறந்த கிராமத்திலும் இது போன்ற முயற்சியை மேற்கொள்ள உறுதி எடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள் என்பது எங்களுக்குக் கிடைத்த பெருமை. தனது தந்தையார் பிறந்த பூர்வீக வீட்டை முழுவதுமாக இதுபோன்ற கல்வி முயற்சிகளுக்காக மாற்றி, அதை சமூகத்திற்கு அர்ப்பணித்துள்ளார் ராஜமாணிக்கம் ஐஏஎஸ்.

அறிவகம் தரும் கற்றல்:வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியில் பங்கேற்ற ஆறு பேரும் இன்று தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணியில் இணைந்துள்ளனர். இதுதான் எங்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. கோடை கால விடுமுறைப் பயிற்சியில் நாங்கள் தொடங்கியுள்ள தட்டச்சுப் பயிற்சியில் மட்டும் 124 பேர் இணைந்துள்ளனர்.

அப்படியென்றால், அதன் தேவை இப்பகுதியில் உள்ளது என்பதை எங்களுக்கு உணர வைத்துள்ளது. பெயர், புகழுக்காக சேவை செய்பவர்கள் மத்தியில், தான் பிறந்த மண்ணுக்காகவும், ஏழை அரசுப் பள்ளிக் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் இந்த சேவையைத் தொடங்கியுள்ள ராஜமாணிக்கம் ஐஏஎஸ்சின் அறப்பணி போற்றுதலுக்குரியது” என்றார்.

இதனையடுத்து இது தொடர்பாக கேரள மாநில உள்ளாட்சித்துறை முதன்மை இயக்குநர் ராஜமாணிக்கம் ஐஏஎஸ் கூறுகையில், “திருவாதவூர் மாணிக்கவாசகர் பிறந்த இடம். என்னுடைய தந்தையார் சிவன் கோயிலில் பேஷ்காராகப் பணியாற்றியவர். கடந்த 2016ஆம் ஆண்டு அவர் மறைந்ததற்குப் பிறகு, சிறிய ஓட்டு வீடாக இருந்த இந்த இடத்தை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் போட்டித் தேர்வுகளுக்கான நூலகம் மற்றும் 'அறிவகம்' கல்வி மையம் என்ற பயிற்சி மையத்தை உருவாக்கினோம்.

வாரந்தோறும் ஆசிரியர்கள் வந்து வகுப்பெடுத்து வருகின்றனர். மற்ற நாட்களில் திருவாதவூரைச் சுற்றியுள்ள மாணவர்கள் இங்குள்ள நூலகத்தை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வாரம் முழுவதும் திறந்து வைத்துள்ளோம். இந்த ஆண்டு முதன் முறையாக கோடை கால பல்திறன் பயிற்சி முகாமைத் தொடங்கியுள்ளோம்.

சுற்றியுள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் வருகை தந்து தங்களுக்கான பயிற்சிகளைப் பெற்றுச் செல்கிறார்கள். என்னைப் போன்று ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ்ஆக உயர்ந்த நிலைக்கு இங்குள்ள குழந்தைகள் அனைவரும் வர வேண்டும். அதற்காக அவர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு.

அதற்கான ஒரு விதை என்ற அடிப்படையில்தான் தற்போது கோடை கால பயிற்சி முகாமைத் தொடங்கியுள்ளோம். எனது இந்த முயற்சிக்கு பேராசிரியர் சத்தியமூர்த்தி, உள்ளூரைச் சேர்ந்த செல்வராஜ், தலைமை ஆசிரியர் தென்னவன், திருநாவுக்கரசு, தர்மலிங்கம், பாலசுப்ரமணியன் ஆகியோர் தன்னார்வலராக இணைந்து இப்பயிற்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.இதன் நோக்கம் என்பது கிராமப்புற மாணவர்களுக்கான வாய்ப்பு. அதற்கான விதை. அவர்களை ஒழுங்குபடுத்தி உயர்ந்த பதவிக்கு தயார்ப்படுத்தல்தான்” என்றார். மேலும், இவரது துணைவியார் நிஷாந்தினி ஐபிஎஸ் கேரள மாநில துணை காவல் துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.

தன் கணவரின் முயற்சிக்கு நிஷாந்தினி மற்றும் குடும்பத்தார் அனைவரும் முழு ஊக்கமளிக்கின்றனர். இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பரத ஆசிரியர் அம்பிகா, பாட்டு வாத்தியார் விஜயன், யோகா ஆசிரியர் சுரேந்திரன், தட்டச்சு ஆசிரியர் கருணாகரன், தையல் ஆசிரியை பாமா, ஓவிய ஆசிரியை பவித்ரா, எழுத்துப் பயிற்றுநர் நாகதர்ஷிணி போன்றோரெல்லாம் திருவாதவூர் பகுதி கிராமக் குழந்தைகளுக்காக சற்றேறக்குறைய 20இல் இருந்து 30 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பாடம் நடத்துகின்றனர்

இதையும் படிங்க:வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாளில் போராட்டம் - வழக்கறிஞர் பகவத்சிங்

Last Updated :Jun 4, 2023, 1:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details